கோ இளங்கோ முத்தரையர்


நாடாண்ட முத்தரைய மன்னர்கள்:
____________________________________

6.கோ இளங்கோ முத்தரையர்

கோ இளங்கோ முத்தரையர்க்கு *உத்தமதாணி* என்ற சிறப்பு பெயரும் இருந்துள்ளது. இவன் *கோனாளறு முத்தரையன்* என்றும் அழைக்கப்பட்டுள்ளான். இந்த கோனாளறு முத்தரையன் சுயேட்சையாக தனித்து ஆண்டவன். இம்மன்னன் வல்லத்தை நலைநகராக கொண்டு புதுக்கோட்டை பகுதிகளையும் ஆட்சிபுரிந்திருக்க வேண்டும் என கருதப்படுகிறது. இவனது காலம் கி.பி.630-660 ஆகும்.

"வரத ஸ்ரீ கோனாளறு முத்தரையற்கு
யாண்டு பதி மூன்றாவது
கீரனூர் உத்தமதாணி ஈஸ்வர
வரத்து பெருமானடிகளுக்குத் ............."

என்ற கல்வெட்டு தனது யாண்டு குறிக்கப்படுவதிலிருந்து உறுதிப்படுகிறது. இக்கல்வெட்டு புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், கீரனூரில் தன்னால் கட்டப்பட்ட உத்தமதானீஸ்வரர் கோவிலில் உள்ளதாகும். இம்மன்னனின் 13ஆவது ஆட்சியாண்டு வரை இருந்ததற்கு சான்றாக உள்ளது.

இந்த கீரனூரில், தனது சிறப்புப் பெயரான "உத்தமதாணி" என்ற பெயரிலேயே இளங்கோவதி முத்தரையன் கோயிலை கட்டி, "உத்தமதானீஸ்வரர்" எனப் பெயரையும் சூட்டியுள்ளான். இந்த கோவில் திருவிழா நடத்துவதற்காக பலரும் நிலக் கொடையளித்து கல்வெட்டியுள்ளனர்.

இவனது பெயரில் புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வட்டத்தில் உத்தமதாணி என்ற பெயரில் ஒரு பெரிய ஊரையும் ஏற்படுத்தியுள்ளான். தற்போது அந்த ஊர் கீழத்தாணியம், மேலத்தாணியம் என்ற பெயரில் புதுக்கோட்டையிலிருந்து-காரையூர் வழியாக ஒலியமங்களம் பெருவழியால் அமைந்துள்ளன.இரண்டும் வருவாய்க் கிராமங்களாக உள்ளன. கீழத்தாணியத்தில் இம்மன்னன் தனது சிறப்பு பெயராலயே உத்தமதாணேஸ்வரர் கோயிலையும் கட்டியுள்ளார்.

இம்மன்னனுக்கு கோ இளங்கோவதி அரையர் என்றும் தென்னவன் இளங்கோ முத்தரையர் என்றும், மல்லன் விதுமன்(னான) தென்னவன் தமிழதியரையன் என்றும் பெயர்கள் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.

இளஙங்கோ வேளாண் என்றொரு கொடும்பாளூர் வேளிர் குல மன்னனும் இருந்துள்ளான், இவன் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தவன். தஞ்சை மாவட்டம், குப்பகோணம் வட்டம், திருவிசலூர் சிவயோக நாதர் கோயிலில், இவனுக்கு அரையன் ராஜராஜன் என்றும்  மதுராந்தக இளங்கோ வேளாண் என்ற பெயர்களில் காணப்படுகிறான். இவன் ராஜேந்திர சிங்க வளநாட்டு, மண்ணிநாட்டு, நாட்டாரிடம் (சபையோரிடம்) திருவிசலூர் சபையினர்க்கு 24 3/4 வேலி நிலம் வழங்கியுள்ளான். இதன் மூலம் வரும் 1181 கலம் நெல் சபையினரிடம் கொடுக்கும்படி செய்துள்ளான்.

இவன் கொடும்பாளூர் வேளிருடன் மணஉறவு கொண்ட முத்தரையன். கொடும்பாளூர் மன்னர் மரபில் பூதி பராந்தகனின் மகன்களான குஞ்சரமல்லன், வீரசோழன், இளங்கோவேள்(ளான்) என்பவர்களும் இந்த இளங்கோவேள் மகன் சுந்தர சோழன் போன்ற பெயர்களும் காணப்படுகின்றன.

பராந்தகன் சிறிய வேளாருக்கு இளங்கோ வேளார் என்றும் வீர இளங்கோவன் என்ற சிறப்பு பெயர்களும் உண்டு. இவன் சோழரின் படைத்தலைவனாக இருந்து ஈழத்தையும்,  பாண்டிய நாட்டையும் வென்றவன். இவன் கீழத்தாணியத்தில் கோயில் கட்டி உத்தமதாணேஸ்வரத்திற்கு நிலக்கொடை அளித்துள்ளான்.

முத்தரையர் மகளார் வரகுணனாட்டி என்பவரை தனது அரசியாக ஏற்றுக்கொண்ட இந்த வரகுணனாட்டியின் நினைவாகவே கொடும்பாளூர் மூவர் கோவிலில் ஒரு கோயிலும் எழுப்பப்பட்டுள்ளது. (தெ.இ.க.தொகுதி.22ல் க.எ.48லிலும், கொடும்பாளூர் வேளிர்கள் பக்.47லிலும் புலவர்.பு.சி.தமிழரசன்) உள்ளன.

உத்தமதாணி என்ற சிறப்புப் பெயர் கோப்பரகேசரியின் 9வது ஆட்சியாண்டில் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட் வட்டத்தில் திருமால்புரத்தில் அழிந்து கிடக்கும் விஷ்ணு கோவில் சுவர்க் கல்வெட்டில் காணப்படுகிறது. இந்த உத்தமதாணி என்பவர் கடுவாய்க்குடி என்ற ஊரைச் சேர்ந்தவர். தெய்வ பக்தர். தமது மூதாதையர் பெயரை சூட்டிக்கொண்டவர்.

இவர் கோவிந்தப்பாடி பெருமானடிகளுக்கு தெய்வ ஆராதனைக்கு வரும் பக்த பிராமணர் ஒருவருக்கு பூசை முடிந்து தினசரியும் அமுது அளிக்க விரும்பியுள்ளார். இந்த அமுதளிப்பு தினசரியும் நடைபெற வேண்டும் என்று விரும்பி கோயிலுக்கு கொடையாக 15 கழஞ்சு பொன் கொடையளித்துள்ளான்.

தான் செய்த தர்மம் நிலைத்து நீடித்து நடக்க வேண்டியும் இடையூறு செய்பவர்களை எச்சரிக்க வேண்டியும் கங்கை, கன்னியாகுமரியிலே செய்த பாவத்தில் ஒரு நாள் தடைப்பட்டாலும் போவார்கள் என்றும் கல்வெட்டில் தெரிவித்துள்ளான். (க.தொகுதி.19ல் க.எ.220)

கொடும்பாளூர் வேளிர்-முத்தரையர் மண உறவில் குஞ்சரமல்லன் என்ற குஞ்சிரன் முத்தரையன் கோவிலுக்கு கொடையளித்துள்ளதையும் இனி காணலாம்.

கீரனூர் உத்தமதானீஸ்வரர் கோயிலில் வடபுறம் சுவற்றில் கல்வெட்டு எண் 198ல் திருபுவனம் சக்கரவர்த்தி இராஜ இராஜ தேவரின் 28ஆவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. இதில் புதுவயல் ஊராரும், விக்கிரமச் சோழ முத்தரையனும், பாப்பாகுறிச்சி ஊராரும், களமாவூர், தச்சன்பட்டு, பஞ்சவன் மாதேவி, விருதராயகுறிச்சி, ஆலத்தூர், ஆனையூர், வடசிறுவாயில் நாடு, கீரனூர், உப்பிலிக்குடி, சிறுபால்லூர், குமாரமங்கலம், அ(ம்)மன்குடி ஊராரும், நாட்டு அரையனும், கைக்குடியூர், சிறுகளத்தூர், இறைங்குடி, இளஞ்சாவூரும், நாஞ்சில் முத்தரையனும், இப்படி இரண்டு நாட்டு அரையர்களும் இக் கோவிலுக்கு நிலம் விட்டு இறையிலியாக கொடுத்துள்ளனர்.

விருதராயக்குறிச்சியில், கடம்பன்வயல், அரசன்வயல், பொற்காரி வயல், குஞ்சிர முத்தரையன் குடிக்காடும் கொடுத்தனர். இப்படிக் கொடுத்ததில் வந்த நீர், நிலம், வயல், குளம், காணியாகப் பெற்றனர். பெற்றவர்கள் சிறியான் எதிரிலாப் பெருமானான நாட்டு அரையன், மருதாந்தகப்பரையன், அடைப்பன் நாயன், கடம்பன் நாயன், நாயன் காடனும் தங்கினான். குஞ்சிர முத்தரையனும் மற்றும் பலரும் பெற்றுள்ளனர்.

இதில் சாட்சிகளாக கீழைப்புதுவயல், விக்கிரம முத்தரையன், குஞ்சிரமுத்தரையன், இளஞ்சை ஊர், நாஞ்சில் முத்தரையன் மற்றும் பல்வேறு நாடாழ்வான்களின் கையெழுத்து உள்ளன (பு.க.எ.198)

பு.க.954 கல்வெட்டில் பிறமாதீச ஆண்டு ஆடி மாதம் 10ம் தேதி வடசிறுவாயில் நாட்டு கீரனூர் உத்தமதானீஸ்பரர்க்கு திருமயம் வட்டம் பனையூர், குலமங்கலம், ஊரவரும், செவலூர், குளிபிறை ஊரவரும் ஆசிரியமாக வழங்கி கல்வெட்டியுள்ளனர்.

இந்த கோ இளங்கோ முத்தரையர் தஞ்சை மாவட்டம் செந்தலையில் உள்ள நியமம் கோயிலின் 2ஆவது தூணில் (க.எண்.448)👇👇

1)வரத ஸ்ரீ கோவிளங்கோ முத்தரையர்க்கு யாண்டு யஅ (18) ஆவது நியமம் மாகாளத்துப்
2)பிடாரியர்க்கு திருவமிதினுக்கும், திருவிளக்கினுக்கும், திரு ஆராதனை செ(ய்)வார்க்கும்
3)திருவமுது அட்டுந் தூபமும், மணியும் கொண்டான் ஒருவனுக்கும் திரு
4)மெழுக்கிடுவார், இருவருக்கும் பொது நானாழி அரிசியாக ......... எயில் நாட்டு குத்த

மங்கலம் மூன்று வேலி அதிலிருந்து வரும் நெல் முன்னூறு கலம் கொடுத்து கல்வெட்டியுள்ளான்.

இவன் தஞ்சை மாவட்டம் தஞ்சை வட்டத்தில் திருச்சுண்ணம் பூண்டியில் இவனது 13ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.643)இக்கோயிலுக்கு (நியமம்) நொந்தா விளக்கு ஒன்றை நக்கம் காளி என்பவர் கொடையளித்துள்ளார். இதற்கு 12கழசு பொன் கொடையளித்துள்ளான்.

நியமம் பிடாரி கோயில் முத்தரையர்களால் கட்டப்பட்டது. கோ இளங்கோ முத்தரையன் என்ற உத்தமதாணி தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதிகளை ஒருசேர ஆண்டவன் (க.தொகுதி.7 க.எ.529).

திருமயத்தை அடுத்து கிழக்கில் அரிமளம் சாலையில் இளஞ்சாவூர் என்ற சிறப்புமிகு ஊர் உள்ளது. இவ்வூரில் குடிகொண்டிருக்கும் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் சிறப்புடன் விளங்குகிறது. இதே வரலாற்றில் இளஞ்சை ஊர் என்று பல கல்வெட்டுக்களில் காணப்படும் இளஞ்சாவூருக்கும் கோ இளங்கோ முத்தரையனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

இவனது ஆட்சிக் காலத்தில் இந்த கோ இளங்கோ முத்தரையன் இளஞ்சாவூர் வழியாக மதுரை செல்ல திட்டமிட்டு சென்றுள்ளார். இந்த இடத்திடல் வரும்போது மன்னனுக்கு அம்மை நோய் கண்டுள்ளது. பயணத்தை விடுத்து அம்மை நோய் நீங்கும் வரை இந்த ஊரிலேயே தங்கியுள்ளான்.

அம்மை நோய் நீங்கியது. இந்த இடத்தில் முத்துமாரியம்மனுக்கு ஒரு கோவிலை இக் கோவிளங்கோ முத்தரையன் எழுப்பி இளங்கோ ஊர் என பெயரிட்டுள்ளான். இந்த பெயர் மருவி இளஞ்சை ஊர், இன்று இளஞ்சா ஊராக சிறப்புடன் விளங்குகிறது. இந்த முத்துமாரியம்மனை முத்தரையர்கள் கொள்ளைக் காட்டில் (புஞ்சை) கண்டு எடுத்து கொண்டுவந்து பூசித்து வருகின்றனர். இந்த அம்மனின் சக்தியை உணர்ந்த பக்கத்து ஊரார்கள் பக்காவாக கட்டிடம் கட்டி பூசை முதலிய காரியங்களை செய்து வருகிறார்கள்.

கண்டு எடுத்த முத்தரையர்கள், சிரத்தை மிகு காட்டாது பராமரித்துள்ளனர். தனவந்தர்கள் கோவிலைக் கட்டி மண்டகப்படி நடத்தி வருகின்றனர். கண்டு எடுத்த முத்தரையர்கள் இன்று முறையாக நான்காவது நாள் மண்டகப்படியை சிறப்புடன் நடத்துகின்றனர்.

தொடரும்....

என்றும் அன்புடன்...
உங்கள் தோழன் சிவமாரி....

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER