கள்வர் கள்வன்



கள்வர் என்ற சொல்லாடல் சங்க இலக்கியப் பாக்களிலேயே பல இடங்களில் பதியப்பட்டுள்ளதை நாம் அறிவோம், சங்க இலக்கியங்கள் அக்காலத்திய வேந்தர்களைக் குறிக்குமிடத்து சிறப்புடன் இந்த சொல்லாட்சியைக் கையாண்டுள்ளன ! மேலும் இதன் தொடர்ச்சியாகத்தான் பிற்கால பாண்டிய, சோழ வேந்தர்களும் கூட தம்மை " கள்ள வேந்தன்" , "கள்ளப் பெருமான்" , " கள்வன் " என்றெல்லாம் பலவாராக தத்தமது கல்வெட்டுகளில் பதிந்து கொண்டுள்ளனர் என்பதும் நமக்கு சொல்லாமலேயே விளங்கும் ! இவ்வாறாக கள்வர் என்ற வார்த்தையை தமிழ் இலக்கியங்களும், கல்வெட்டுகளும் உயரிய பொருளில் கையாண்டுள்ளன...

  ஆனால் 'வார்த்தைகளின் பொருளை ' அந்தந்தக் காலகட்ட அரசியல் நிலையோடு ஒப்புமைப்படுத்தி முறையான ஆய்வியல் அணுகுமுறையைக் கையாளாமல்  சிலர் பழங்காலத்திய கள்வரை இந்நாளைய 'கள்ளர்' சாதியினரோடு தொடர்புபடுத்தி எழுதி வருகின்றனர். அந்த வகையில் சோழ, பாண்டிய மன்னர்களைப் போலவே " கள்வர் கள்வன்" என்ற பெயரால் செந்தலைக் கல்வெட்டுகளில் குறிக்கப்பெற்றுள்ள முத்தரையர் மரபுவழி மன்னரான "சுவரன் மாறனாகிய இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்"  கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்கிற ரீதியில் தற்காலத்தில் சிலர் ஆய்வு என்கிற பெயரில் தங்களின் 'அரைவேக்காட்டுத்தனத்தை'  வலைதளங்களில் பதிவாகப் பதிந்து வருகின்றனர்! இவர்களைப் பொறுத்தமட்டில் கள்வன் என்றவுடனேயே அது கள்ளர் என்கிற தனியொரு சாதியாக மாறிவிடுகிறது

முதலில் கள்வருக்கும் கள்ளருக்குமான தொடர்பு என்ன என்பதைப் பற்றி ஆராய்வோம்... வழிப்பறி, கொள்ளை, வேற்றுப் புலத்தாரிடமிருந்து கவர்ந்து வருதல் போன்ற களவுச் சம்பவங்களைக் குறிக்குமிடத்து கள்ளர் என்கிற வார்த்தையும், சில இடங்களில் கள்வர் என்கிற வார்த்தையும் சங்கப் பாக்களில் பயின்று வருகின்றன. அதேநேரத்தில் சில இடங்களில் அரசன், தலைவன், வேந்தன் என்கிற பொருளிலும் 'கள்வன் 'என்ற வார்த்தை பாக்களில் பயின்றுவரக் காண்கிறோம்!  எனவே எதைக் குறித்து வருகிறது என்பதைப் பொறுத்தே கள்வனுக்கு விடைகாண முடியும்...

உதாரணத்திற்கு சீவக சிந்தாமணியில் செய்யுள் எண் 741 ல் " கள்ளராற் புலியை வேறு காணிய'" எனும்  தொடரை விளக்குமிடத்து நச்சினார்க்கினியார் " அரசரைக் கொண்டு சீவகனைப் போர்காண வேண்டி.." என்று பொருள் கொள்கிறார். அதாவது இச்செய்யுளில் 'கள்ளர் ' எனும் சொல்லினை 'அரசர் ' என்பதாக பொருள் காண வேண்டுமே தவிர திருடன் என்று பொருள் கூற முடியாது!  

அதுபோலதான் செந்தலைத் தூண் கல்வெட்டுகளிலோ அல்லது கிள்ளுக்கோட்டை நடுகல்லிலோ குறிக்கப்பட்டுள்ள 'கள்வர் கள்வன்' என்ற சொல்லை ஆதாரமாக்கி பெரும்பிடுகு முத்தரையரை 'களவில் உயர்ந்தவர் ' என்று நாம் பொருள் சொல்ல முடியாது.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுக்காவில் "வளி எறி" என்ற குளம் குன்றாண்டார் கோவில் கல்வெட்டு  கலிமூர்கா இளவரையன் {மன்னர்}என்பவரால் கட்டப்பட்டது என்று சொல்கிறது. மேலும் தன்னை முத்தரையர் மன்னரான பேரரசர் பெரும்பிடுகனார், பேரிடியரையரின் வேலைக்காரன் என்று அழைத்துக்கொள்கிறார்...

மேலும்
கொங்கு நாட்டை ஆண்ட வீரச்சோழ கலிமூர்கா களப்பிரர்களிடம் இருந்து கொங்கு நாட்டை கைப்பற்றியவர் என்றும் தங்களை காளி மன்னர்கள் என்றும் களப்பிரர்களுக்கு இரக்கமற்ற எதிரி என்றும் குறிப்பிடுகிறார்...

இதன் மூலம் மூன்று முக்கியமான விஷயங்கள் தெளிவாகிறது...

1. கொங்கு நாட்டை ஆண்ட வீரச்சோழர்கள் முத்தரையர் பரம்பரை 

2. #கள்ளவர்_கள்வன் என்ற முத்தரையர் பட்ட பெயருக்கான தெளிவாக விளக்கம் மற்றும் வீரசோழ கலிமூர்கா தன்னை முத்தரையர்களின்  வேலைக்காரன் என்று அழைத்துகொண்டு ஆட்சி செய்தான். இவர்கள் {கலிமூர்கா} தங்களை களப்பிரர்களின் இரக்க மற்ற எதிரி என்று குறிப்பிடுவதன் மூலம் நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல #கள்ளவர்_கள்வன் பட்டத்தின் விளக்கம் களப்பிரர்களின் எமன் என்று தெளிவாகிறது... 

3. #வளி_எறி என்ற குளத்தின் பெயர் மூலம் முத்தரையர் வேலைகார படையில் வளரி ஒரு முக்கியமான இடத்தில் இருந்ததை அறிந்து கொள்ளமுடிகிறது..

நடுகல் ஆராய்ச்சியாளரான இரா. பூங்குன்றன் போன்றவர்கள் கூட ( தொல்குடி- வேளிர்- அரசியல்)  கள்வர் என்கிற வார்த்தை மிகப் பிந்தைய காலத்திலேயே திருடன் என்கிற ஒற்றைப் பொருளைத் தருகிற சொல்லாக சுருங்கிவிட்டதை பதிவு செய்துள்ளதை இங்கு நாம் கவனத்தில்  கொள்ளலாம்.

மேலும்  முத்தரையர்களையும், கள்ளர்களையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக் கொள்ளும் போக்கு பலகாலமாகவே வரலாற்றாசிரியர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதற்கு உதாரணமாகச் சில நடைமுறைகளைச் சொல்லலாம்...

1881 ம் ஆண்டில் நடைபெற்ற சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முசிறி அருகே உள்ள ஒரு கிராமத்தில் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த அம்பலகாரர்கள் தங்களை கள்ளர் சாதி என்பதாக  பதிவிடுவதை எதிர்த்து ஆங்கிலேய அரசுக்கு புகார்  மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். மேலூர் வட்டாரக் கள்ளர்கள் வெள்ளையர் காலம் முதல் தங்களை 'அம்பலகாரர் ' என கூறிக் கொண்டமையால்  முத்தரைய அம்பலகாரர்களையும்  அக்காலத்தில் கள்ளர் சாதியாக கணக்கிட முனைந்துள்ளனர் என்பதற்கு இது ஒரு சான்றாகும்...

இதேபோல புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 1931 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கீட்டிலும் கூட முத்தரையர் சமூகத்தின் உட்பிரிவினரான வலையர், சேர்வை, அம்பலகாரர் மக்களை கள்ளர் சாதியோடு சேர்த்து  கணக்கிட்டுள்ளனர்...
முத்தரையர்களுக்கும் , கள்ளர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றாலும் சிலரின் கடந்த காலத்திய தவறுகளால் இரு சமூகத்தினரையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளும்போக்கு இன்றளவும் நீடித்து வருகிறது.

குறிப்பாக கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியரான ந. மு. வேங்கடசாமி நாட்டார் போன்றோரே  கள்ளரையும், முத்தரையரையும் ஒன்றாக இணைத்தும், குழப்பியும் பேசியுள்ளனர் , கல்வெட்டு ஆசிரியர்களின் சிலரின் முரண்பட்ட ' சொல்லாடல்' குறிப்புகளை இவர்கள் ஆதாரமாக சொல்லிக்கொண்டு, 'கள்வன் ' என்று பெரும்பிடுகு முத்தரையர் குறிப்பிடப்பட்டுள்ளதால் அவர் கள்ளர் வகுப்பினரே என்று கதையளந்துள்ளனர். 

உள்ளபடி பார்த்தால் செந்தலை கல்வெட்டுகள் என்பவை இலக்கியப் பாக்களே! அவற்றில் முத்தரையர்களின் பல பட்டங்கள் இடம்பெற்றுள்ளன தவிர எந்த இடத்திலும் அவர்களின் குலம் குறித்த குறிப்புகள் இல்லை. சத்ருமல்லன், அதிசாகசன், ஸ்ரீமாறன், அபிமான தீரன், சத்ருகேசரி, தமராலயன், செருமாறன், தஞ்சைக் கோன் என்ற பல பட்டப் பெயர்களுள் ஒன்றாக கள்வர் கள்வன் என்பதும் வந்துள்ளது! எப்படி  இந்தப் பட்டங்களின் ஒன்றில் 'கோன் ' என்று வந்திருப்பதாலே முத்தரைய மன்னர்களை கோனார்கள் என்று சொல்லிவிட முடியாதோ அப்படியேதான் கள்வன் என்ற சொல்லை கள்ளராகவும் வகைப்படுத்திட முடியாது...

வேங்கடசாமி நாட்டாருக்கு கடந்த நூற்றாண்டில் "கள்ளர் சரித்திரம் " என்ற நூலை எழுதுவதற்கான அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதும்,  அதிலும் குறிப்பாக  தென்பகுதி  கள்ளர்களையும், பிறமலைக் கள்ளர்களையும் காட்டிலும் தஞ்சைக் கள்ளரை உயர்த்திப் பிடிக்க வேண்டியதற்கான அவசியம் நாட்டாருக்கு ஏன் ஏற்பட்டது என்பதையும் முதலில் நாம் உணர வேண்டும்.

கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில்  கள்ளர் சமூகத்தின் மீது வெள்ளையர்களால் தீவிரமான முறையில் திணிக்கப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டத்தின் கொடூரத்திலிருந்து "தஞ்சைக் கள்ளர்கள்" தம்மை தனிமைப்படுத்திக் கொள்வதற்காகவே சில மன்னர்களோடும், புகழ் வாய்ந்த ஆன்மிக அறச்செயலாளர்களுடனும் தங்களை ஒப்பிட்டு 1920களுக்குப் பிறகு புத்தகங்களை எழுதி அதை வெள்ளையர்களிடத்தில் ஆவணமாகச் சமர்ப்பித்து அந்த சட்டத்திலிருந்து தம்மை தப்பிவித்துக் கொண்டனர் என்பது வரலாறு...
எந்த அடிப்படை ஆதாரங்களுமின்றி  முத்தரைய மரபினரையும், முத்தரைய வேந்தரான திருமங்கை ஆழ்வாரையும் கள்ளர் சாதியாக உருவகப்படுத்த வேண்டிய அவசியம் இதன் காரணமாகவே வேங்கடசாமி நாட்டாருக்கு   ஏற்பட்டது என்பதை அக்கால அரசியல் குறித்து ஊன்றிப் படிப்போரால்  எளிதாக உணர முடியும்... அந்தப் புத்தகத்திலும் கூட வேங்கடசாமி நாட்டார் கள்ளர்களை முத்தரையர்களோடு

                'உடன் இணைத்துக் கொண்டாரே தவிர' கள்ளர்கள்தான் முத்தரையர் என்று 'உரிமை          கோரவில்லை  '

கள்ளர் சமூகத்தை சேர்ந்த திரு முகில்நிலவன் அவர்களின் 'தமிழ் இலக்கியத்தில் குற்றப்பரம்பரையினர்' புத்தகத்தின் கட்டுரை மட்டுமல்லாது  சுந்தரவந்தியத் தேவனின் “பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்" நூலிலும் (பக்க எண்: 650) தெளிவான முறையில் நான் மேற்சொன்ன தகவல் பதிவுசெய்யப்பட்டுள்ளது.  

முத்தரையர்களின் வரலாறு கள்ளரின மக்களின் ஒரு பிரிவினரை "குற்றப் பரம்பரை " எனும் கொடும் சட்டத்திலிருந்து காப்பாற்றியுள்ளது என்றால் அதை பெருமைக்குரிய வரலாற்றியல் நிகழ்வாக நினைவில் நிறுத்திக் கொள்வதில் தவறில்லை...   ஆனால் பாவாணர் போன்ற மொழி ஆய்வாளர்களே கள்ளர் சாதியைத்தான் முத்தரையர் என்று பதிவு செய்துள்ளனர் என்றெல்லாம் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவதை எப்படி ஏற்றுக கொள்ள முடியும்..?  சரி அவர்கள் சொல்லும் ' தமிழர் வரலாறு' நூலில் பாவாணர் என்னதான் சொல்லியிருக்கிறார் என்று பார்த்தோமேயானால்
                
              " தஞ்சை மாவட்டத்தில் ' செம்பிய முத்தரையர்' பட்டம் கொண்ட கள்ளர்கள் முத்தரையர்களின் " படை மறவர்" வழிவந்தோராக இருக்கலாம்..." 

என்றுதான் சொல்லியுள்ளாரே தவிர கள்ளர்கள்தான் முத்தரையர் என்று ஓரிடத்திலும் சொல்லவில்லை!  இந்த மூன்று வரிகளை மட்டும் படம் பிடித்து வைத்துக் கொண்டு வரலாறு பேசும் கள்ளர் வரலாற்றாய்வாளர்கள் அதற்கு மேலேயுள்ள வரியில்
       
    " இன்றைய திருச்சி மாவட்டங்களில் பயிர்த் தொழில் செய்து வாழும் முத்திரியர்களே பண்டைய முத்தரையர் வழியினர்"

என்று பதிவு செய்துள்ளதை வசதியாக மறைத்து விடுகின்றனர். 

மேலும் அதே தமிழர் வரலாறு புத்தகத்தில் " இன்றைப் பிறவி குலங்கள்" எனும் தலைப்பில் அம்பலக்காரன் எனும் பிரிவினரே முத்தரையர், வலையர், வன்னிய வலையர் என்று பிரிவுற்று இருப்பதையும் பாவாணர் ஐயா தெளிவாகச் சுட்டியுள்ளார் இதையும் கள்ளர்கள் கணக்கில் கொள்வதில்லை!

படை மறவர் வழியினர் என்பதற்கும், இந்தச் சாதியின் வழிவந்தோர் என்பதற்குமான வேறுபாட்டை அறிய முடியாதவர்களை எண்ணி வியப்படையவே முடிகிறது! மேலும் ' செம்பிய முத்தரையர் ' பட்டம் தஞ்சை கள்ளர்களுக்கு வழக்கில்  இருக்கிறது என்பதைக் கூட பாவாணர் ஐயா "கள்ளர் சரித்திரம் " எனும் நூலிலிருந்து தான் எடுத்தாளுகிறாரே தவிர நடைமுறைச் சான்று ஏதும் இல்லை...

பட்டம் போதுமா சாதியை வரையறுக்க...?
           
          வேட்டுவ மரபினரான வலையர் குடியினரே பின்னாட்களில் முத்தரையர் என்று அழைக்கப் பெற்றனர் என்பதற்கு பல நூறு சான்றுகள் இருக்கின்றன. கல்வெட்டு, பட்டயம், இலக்கியம், கடவுள் வழிபாடு , முத்தரைய மன்னர்களுடனான தொன்மத் தொடர்பிற்கான நிகழ்காலத்திய சான்றாக பட்டயங்களில் பயின்று வந்து இன்றும் தொடரும் கரைப் பெயர்கள் என்று அவற்றை வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்... ஆனால் கள்ளர்கள் முத்தரையர் என்பதற்குக் கூட சான்றுகள் வேண்டாம், முத்தரையர் பட்டம் அவர்களுக்கு இருக்கிறது என்பதற்கு குறைந்தபட்சம் ஒரு பட்டயமாவது இருக்கிறதா என்றால் ஒன்றும் கிடையாது! முத்தரையர்களின் ஆட்சி முற்றுப் பெற்று ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் திடீரென்று  21 ம் நூற்றாண்டில் வந்து நாங்கள்தான் முத்தரையர் என்பது நகைப்பிற்குரிய வரலாற்று முரணே தவிர வேறில்லை.

வலையர், முத்துராசா, அம்பலகாரர், காவல்காரர், அரையர் , சேர்வை என்று பலவாக உட்பிரிவுகளாக பிரிவுற்றிருந்தாலும் இவர்களின் ஒவ்வொரு கரைப் பெயரும் கூட பட்டயங்களில் முத்தரையர் என்றே பயின்று வந்துள்ளது, இன்றைக்கு நேற்றல்ல ஆயிரம் ஆண்டு காலத்திய வரலாற்றுத் தொடர்பின் வழிவந்தது அவை!
வலையர் என்கிற தொன்மத்தின் வழியினராகிய முத்தரையர் மக்கள் வெறும் பட்டமாக அதை சூடவில்லை, அது சாதியாகவே அவர்களோடு  பன்னெடுங்காலமாக ஒன்றி வந்துள்ளது!  தமிழகத்தில் வேறு எந்தவொரு சமூகமும் ' முத்தரையர் சாதி'  என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படவில்லை.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடான ' தமிழ் கல்வெட்டியல் வரலாறு' எனும் புத்தகதில் இடம்பெற்றுள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம் அழுந்தூர் கல்வெட்டு " காடையான் வலையன் குறிச் சேந்தனான பெரியநாட்டு முத்தரையன்" என்பவனைக் குறிக்கிறது. இந்தக் கல்வெட்டு குறிப்பிடும் காடையான் கூட்டத்தினர் இன்றளவும் திருமயம் பகுதியில் காடன், காடையன் என்ற பெயரில் வாழ்ந்து வருகின்றனர்.

அதேபோல புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள் எண் 926, 906 ஆகியன கோனாட்டு முத்தரையன், செவந்தி முத்தரையன் போன்றவர்களை வலையர்கள் ஒன்று கூடி 'சாதி நீக்கம் ' செய்துள்ளதைக் குறிப்பிடுகிறது! ஒரே சாதிக்குள்தான் சாதி நீக்கம் நடைபெற முடியும் . மற்றும் புல்வயல் கல்வெட்டு ( எண் 847 ) அவ்வூரைச் சேர்ந்த கடம்பராய முத்தரையன், எழுந்தாரமைந்த முத்தரையன், தேவேந்திர முத்தரையன்  உள்ளிட்ட மூன்று வலையர் என்றும் குறிப்பிடுகிறது.

மேலும் கி.பி 1127 ம் ஆண்டுகாலத்திய விக்கிரமச் சோழனின் கல்வெட்டு ' வலையன் கடியாறனுக்காக வாணராய முத்தரையன் ' நந்தா விளக்கு ஒன்றை கோயிலுக்கு வைத்துள்ள தகவலை தொல்லியல் ஆவணத்தின் ( 12/ 2001) ஒழிந்தியாம்பட்டு ஊர் கல்வெட்டு நமக்கு அறியத் தருகிறது, மறைந்த தந்தைக்கு தனயன்  விளக்கு வைப்பதும், அண்ணனுக்கு தம்பி விளக்கு வைப்பதும் பழங்காலத் தமிழர் வழக்காகும்.

இதுபோல வாணதிராயர் போன்ற குறுநிலத் தலைவர்களால் வழங்கப்பெற்ற நூற்றுக்கணக்கான பட்டயங்கள் வலையர் என்போரே முத்தரையர் என்று சான்றுடன் நிறுவுகிறது

நன்றி: துரை.இராஜகுமரன் - மதுர வீரன்

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER